Wednesday, 8 June 2016

ஜேர்மன் குடியேற்றவாசிகளால் புரியப்பட்ட 69 ஆயிரம் குற்றச் செயல்கள்

ஜேர்மன் குடியேற்றவாசிகள் இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களுக்குள் 69 ஆயிரம் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அவற்றுக்காக முயற்சி செய்துள்ளனர் என்று ஜேர்மனிய பொலிசார்  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வட ஆபிரிக்கா,ஜோர்ஜியா மற்றும் செபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகளே அதிகமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சிரியா,ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தளவிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் 6.6 வீதமானவை போதைப் பொருள் சார்ந்த குற்றச் செயல்களாகவும் 1.1 வீதம் பாலியல் குற்றச் செயல்களாகவும் உள்ளன என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மாத்திரம் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பல நாடுகளில் இருந்து குடியேற்றவாசிகளாக ஜெர்மனுக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் சர்வஜன வாக்கெடுப்பில் 75 லட்சம் பேர் வாக்குரிமையை இழப்பர்

பிரிட்டனில் இந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை 75 லட்சம் பிரித்தானியர்கள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த வாக்காளர்களுள் 86 வீதமானவர்களே பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதனால் 75 லட்சம் பேர் வாக்களிக்கமுடியாமல் போகும் என்றும் தேர்தல் அணைக்குழு நேற்றுத் தெரிவித்தது.

கடந்த மாதம் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களைப் பதிவு கொண்டனர்.திங்கள் கிழமை பதிவு செய்யப்பட்ட  2 லட்சத்து 26 பேரும் இதற்குள் அடங்குகின்றனர் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கும் 75 லட்சம் பேர்களுள் அதிகமானவர்கள் இளைஞர்களாகவும் வீடுகளை விட்டுச் சென்றவர்களாகவும் உள்ளனர் என்று ஆணைக்கு குழு நேற்றுக் கூறியது.

30,000 மணமக்கள் பிரிட்டனுக்குள் வருடந்தோறும் பின்கதவால் நுழைவு

புது மணப் பெண்களாக அல்லது புது மாப்பிள்ளைகளாக வருடம் தோறும் 30,000 பேர் பிரிட்டனுக்குள்  பின் வழியாக  நுழைகின்றனர் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட ஏற்பாடுகளே இதற்குக் காரணம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் மாத்திரமே இந்தக் குடிவரைவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியே உள்ளவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய வேண்டுமென்றால் பிரிட்டனில் உள்ள குடிவரவு சட்டத்தின்படி,தொழிலுக்கான வீசாவை அல்லது குடும்பமாகக் குடியேறுவதற்கான விசாவைப் பெற வேண்டும்.

ஆனால்,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளை உறவினர்களாகக் கொண்டவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.இவர்கள் மூன்றாம் தரப்பு நாடுகளின் பிரஜைகள் என அறியப்படுவதோடு டேவிட் கேமேரோன் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டது முதல் இவ்வாறான 140,921 பேர் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்கள் ஐரோப்பிய நாடுகளைச் சாராத பிரஜைகளையும் பிரிட்டனுக்குள் நுழையச் செய்கின்றது.இதன்மூலம் பிரிட்டன் குடிவரவு முறைமையில் கட்டுப்பாட்டை இழந்து செல்வதைக் காட்டுகின்றது என்றும் இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்றும் பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் லேயன் துன்கன் சிமித் தெரிவித்துள்ளார்.

வழுக்கை தலையை மறைக்க முடி மாற்று சிகிச்சை செய்த டாக்டர் மரணம்

சென்னையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் தலையில் விழுந்த வழுக்கையை மறைக்க ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், முடி மாற்றும் சிகிச்சை செய்து கொண்டதால் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணமான, சென்னையில் உள்ள, ஏ.ஆர்.ஹெச்.டி. என்ற அழகு மையத்தை இழுத்து மூடிய அரசு, மருத்துவக் கவுன்சில் மூலமாக, விதிகளுக்கு முரணாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

புருஷன்-பொண்டாட்டி சண்டை காரணமாக அம்பலத்திற்கு வந்த சிறுநீரக மோசடி

மேற்கு வங்கத்தில் கணவன் - மனைவி இடையிலான சாதாரண சண்டை மூலமாக மாபெரும் சிறுநீரக மோசடிச் சம்பவம் அம்பலத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிலிகுரியில் ஒரு பெண் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சிக்கிய விதம் மிக மிக சுவாரஸ்யமானது.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவர் பெயர் தேவசிஷ். இவர் சிறுநீரகத் திருட்டுக்காக ஆட்களை நைச்சியமாக பேசி கூட்டி வரும் தரகர் ஆவார். இவர் தனது மனைவி மோமிதாவின் சிறுநீரகம் ஒன்றை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்குத் தானமாக வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்து விட்டார் மோமிதா.

மேலும், தனக்குப் பணமே தருவதில்லை என்றும் கூறி சண்டை போட்டுள்ளார் மோமிதா. தனக்குப் பணம் கொடுத்தால்தான் சிறுநீரகத்தைத் தருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை தேவசிஷ். இதையடுத்து கோபமடைந்த மோமிதா போலீஸாருக்குப் போனைப் போட்டு அத்தனையையும் அம்பலப்படுத்தி விட்டார்.

இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். விளைவு, இன்று தேவசிஷ், அவரது மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலின் தலைவர் பெயர் டி.ராஜ்குமார் ராவ் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் சொல்கிறார்கள். இவருக்கு மேற்கு வங்க மாநிலம் மட்டுமல்லாமல், கோவை, நாக்பூர், ஜலந்தர், கான்பூர் ஆகிய இடங்களிலும் ஏஜென்டுகள் உள்ளனராம்.

இதையடுத்து அங்கு தற்போது போலீஸார் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 10 பேருக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர். இந்த விவகாரத்தில் பல டாக்டர்களும் சிக்குவார்கள் என்று தெரிகிறது. இந்த டாக்டர்களுக்கு சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய பல லட்சம் பணம் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பணம் பெற்றுக் கொண்டு சிறுநீரகங்களை எடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கும் வேலையையும் இவர்கள் செய்து வந்துள்ளனராம். கணவன், மனைவி பிரச்சினையால் வெளி உலகத்திற்கு தெரிய வந்த இந்த மாபெரும் சிறுநீரக மோசடியில், இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் கண்டுபிடிக்கப்படலாம் என போலீஸார் கூறுகின்றனர்.

கோட்டாபே உள்ளே,சந்திரிக்கா வெளியே?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாம் நிலைத் தலைவராவதற்கான அனைத்துத் தகுதிகளும் தனக்கு  இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவராகக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று வெளியாகி இருந்த செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் இறைமை,தேசியம்,பாதுகாப்பு மற்றும் இராணுவம் ஆகியவை மீது தனக்கு அதிக அக்கறை உண்டு என்று கூறிய கோட்டாபே நாட்டைப் பாதுகாப்பதற்காக களத்தில் இறங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.இதன்  மூலம் அவர் அரசியலில் குதிப்பதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

கோட்டாபே  சுதந்திரக் கட்சிக்கு உள்ளே கொண்டு வரப்பட்டால் தான்  அரசில் இருந்து விலகுவார் என்று  முன்னாள் ஜானதிபதியும் சிலங்கா சுதந்திரக் கட்சியின் போசகருமான சந்திரிகா பண்டாரநாயக தெரிவித்துள்ளார்.

.

இராணுவத்தின் கையிருப்பில் இருந்த ஆயுதங்களுள் 10 வீதம் அழிவு

கொஸ்கம ஆயுதக் களஞ்சிய வெடிப்பின் காரணமாக இலங்கை இராணுவத்தின் கையிருப்பில் இருந்த ஆயுதங்களுள் 10 வீதமான ஆயுதங்கள் அழிந்துவிட்டன என்று இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு,இந்தத்  தீ விபத்துக்குள்ளான களஞ்சியசாலையில் இருந்தும் 10 வீத ஆயுதங்களே எஞ்சியுள்ளன என்றும் அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளதாகவும் மேல் மாகாணத்துக்கான கட்டளைத் தளபதி சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 47  பேர் காயமடைந்துள்ளனர்.முகாமைச் சுற்றியுள்ள மக்கள் இடம்பெயர்ந்து இப்போது மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.இருந்தும்,1120 பேர் இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை  நடத்துவதற்கான விசேட நீதிமன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு சபை இராணுவத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இது நாசகார வேலையாக இருக்குமா என்று சட்ட,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

 தேச விபரங்களை இப்போது மதிப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க,இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகத் கூறியுள்ளார்.அத்தோடு,தனது ஆட்சிக் காலத்தில் இந்த ஆயுதக் களஞ்சியத்தை  வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.




சுறா மீன் தாக்குதலால் மூதாட்டி பலி

பிரிட்டனைச் சேர்ந்த டொரீன் கொல்யர் என்ற 60 வயது மூதாட்டி ஒருவர் ஆஸ்திரேலிய கடலில் சூரா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பே அவரது கணவருடன் ஆஸ்திரேலிய சென்றுள்ளார்.

இவர் நீந்துவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.சம்பவ தினத்தன்று இவரும் இவரது நண்பியும் நீந்திக் கொண்டிருந்தேபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அவரது நண்பி டொரீனைக் காப்பாற்ற முயன்றபோதும் அவர் உயிரிழந்துவிட்டார்.

இது சுறா மீனின் தாக்குதலால் ஏற்பட்ட மரணம்தானா என்று ஆஸ்திரேலிய பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் பயங்கரவாதி கைது;பிரான்சில் பதினைந்து தாக்குதல்கள் முறியடிப்பு

EURO 2016 உதைப் பந்தாட்ட நிகழ்வின்போது தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை உக்ரைன் நாட்டுப் பொலிசார் மடக்கிப் பிடி த்துள்ளனர்.பயங்கரவாதியிடம் இருந்து பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் அவர்கள்
கைப்பற்றியுள்ளனர்.

ரொக்கட் லோஞ்சர்கள் -02,வெடிமருந்து 125 கிலோ ,AK47 மற்றும் கைக்குண்டுகள் என பல பொருட்கள் அவனிடம் இருந்து மீட்கப்பட்டன.

உக்ரைன்-போலந்து எல்லையில் வைத்து இவன்  மே மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டான் என்றும் இவன து பெயர் கிரெகோர் மௌடக்ஸ் [25]என்றும் உக்ரைன் பாதுகாப்பு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.இவன்  பிரான்சில் இடம்பெறவுள்ள EURO 2016 நிகழ்வில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டம் தீட்டி இருந்தமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

அத்தோடு,இவன்  முஸ்லிம் மற்றும் யூதர்களின் வழிபாட்டுத்தலங்கள்  மற்றும் அரச கட்டடங்கள் போன்றவை மீதும் தாக்குதல் நடத்துவதற்கு இவர் திட்டமிட்டிருந்தானாம்.மொத்தமாக 15 தாக்குதல்களை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தானாம்.